10 அணிகள் இடையிலான 18-ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது.
முன்னதாக ஐ.பி.எல். போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜூன் 3-ஆம் திகதி வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 12- ஆம் திகதி அறிவித்தது. எஞ்சிய போட்டிகளுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இதன்படி பாதியில் ரத்து செய்யப்பட்ட பஞ்சாப்- டெல்லி அணிகள் இடையிலான மோதல் உள்ளிட்ட 13 லீக் போட்டிகள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. லீக் சுற்று வருகிற 27- ஆம் திகதி நிறைவு பெறுகிறது.
முதலாவது தகுதி சுற்று 29- ஆம் திகதியும், வெளியேற்றுதல் சுற்று 30- ஆம் திகதியும், இரண்டாவது தகுதி சுற்று ஜூன் 1- ஆம் திகதி யும், இறுதிப்போட்டி ஜூன் 3- ஆம் திகதி யும் நடைபெறுகிறது. ‘பிளே ஒவ்’ சுற்று நடைபெறும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், 8 நாள் இடைவெளிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்து வீரநடை போடுகிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும். இதனிடையே போட்டி தள்ளிவைக்கபட்டதால் தாயகம் திரும்பிய அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்தியா வரவில்லை. 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்) வீழ்த்திய அவர் ஒதுங்கி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (505 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ஆடும் முதல் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கேப்டன் ரஜத் படிதார், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி இங்கிடி, சுயாஷ் ஷர்மா பலம் சேர்க்கின்றனர்.
கொல்கத்தா அணி 12 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான போட்டிமழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.