பொதுத்தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான நான்கு நாட்களில் முதல் நாளான வெள்ளிக்கிழமை அண்ணளவாக இரண்டு மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாக கனேடிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அடுத்துவரும் நாட்களின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை கையாளப்போவதாகவும் கனேடிய தேர்தல்கள் ஆணைக்குழு சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளது.
கடந்த 2021 பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 5.8 மில்லியன் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்திருந்தனர். இது 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது 18 சதவீதத்திற்கும் மேற்பட்ட அதிகரிப்பாகும்.
இம்முறை முன்கூட்டிய வாக்களிப்பு நாட்கள் நான்கும் April இன் நீண்ட வார இறுதிநாட்களில் அமைந்திருந்ததுடன் திங்கட்கிழமையுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்தலுக்கு ஒரு வாரமே மீதமுள்ள நிலையில் Liberal தலைவர் மார்க கேர்னி மற்றும் NDP தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோர் சனிக்கிழமை தங்கள் முழு பிரச்சார உறுதிமொழிகளையும், செலவுகளையும் உள்ளடக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே சனிக்கிழமை பிரிடிஷ் கொலம்பியாவின் ரிட்ஷ்மண்டில் பிரச்சாரக் கூட்டத்தின் போது உரையாற்றிய கொன்சவேடிவ் கட்சி தலைவர் பியர் பொலிவ்ரே தன்னுடைய முழுமையான ஆவணம் விரைவில் வெளிவரும் எனவும் அவற்றில் 95 சதவீதமானவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.