இந்தியாவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய மேற்கு எல்லையில் தற்போது பாதுகாப்பு கணிசமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ராஜஸ்தான், பாகிஸ்தானுடனான தனது எல்லையை முழுமையாக மூடி உள்ளது.
இந்நிலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (BSF) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள், எதிரிகளிடம் இருந்து எந்தவொரு பதிலடி அல்லது எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகளையும் தடுக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டவை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக ராஜஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “எல்லைக்கு அருகில் கண்டறியப்பட்ட எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிலைமை பதற்றமாக உள்ளது, ஆனால் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று கூறினார்.
பாகிஸ்தான் – ராஜஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேறி வருகின்றனர்.
பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்ததற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.