குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை தொடர்பு கொள்ள முயற்சித்தமை தொடர்பில் விசாரிக்க சிஐடியில் முன்னிலையாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று கேகாலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், பிள்ளையான் ரணில் விக்ரமசிங்கவுக்கு உதவிய ஒருவர் என்றும், அவரது அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர் என்றும் கூறியுள்ளார்.
தனது ஆட்சியின் உறுப்பினர் ஒருவர் திடீரென காவலில் எடுக்கப்பட்டாரா என்பதை விசாரிப்பது தனது பொறுப்பு என்று கூறிய தலதா அதுகோரள, ரணில் விக்ரமசிங்க இந்தப் பொறுப்பை மட்டுமே நிறைவேற்றியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பின்னால் வேறு எந்த காரணமும் இல்லை என்றும், முன்னாள் ஜனாதிபதியை சிஐடிக்கு வரவழைத்து, தொலைபேசி மூலம் பிள்ளையானை தொடர்பு கொள்ள முயற்சித்ததற்கான காரணத்தை விசாரிக்க முடிந்தால் அவர் அதற்கு தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இங்கே மறைக்க எதுவும் இல்லை. அவர்கள் முன்பு பட்டலந்த விவகாரத்தை வளர்த்தார்கள், இப்போது அவர்கள் இந்த அழைப்பைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சாமர சம்பத் தசநாயக்க தொடர்பான அவரது கருத்துகள் குறித்தும் அவர்கள் ஒரு வாக்குமூலம் பதிவு செய்ய விரும்புகிறார்கள்.
இவற்றை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் விடயங்களை மறைக்க மாட்டோம், மக்களும் மறைக்க முடியாது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.