இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளில் 34 படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு செயல்படுத்தவுள்ள இந்த நடவடிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் பகுதியில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்குடன் ஆழ்கடலில் செயற்கையான பவளப்பாறைகளை வளர்க்கும் நோக்கில் முதற்கட்டமாக 34 படகுகளை உடைத்து மூழ்கடிப்பதன் மூலம் பவளப்பாறைகளை எளிதாக வளர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக மீனவர்களின் படகுகளை சிதைத்து, அவற்றை ஒருபோதும் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதன் மூலம் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக ஒழிப்பதே இலங்கை அரசின் இந்தத் திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அத்துடன் இலங்கை அரசிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.