அடையாளம் தெரியாத ஒருவர் காரில் சட்டவிரோதமாக நுழைந்து, 8 வயது சிறுமியை தள்ளிவிட்டு, அவருடைய தாயையும் மிரட்டியதாக 2025.05.03 அன்று கிடைத்த புகாரின் பேரில் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டன.
கறுவாத்தோட்ட பொலிஸ் பிரிவின் மல்பாரா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், புதன்கிழமை( 07) அன்று, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கொலன்னாவ பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலன்னாவை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விசாரணையில், பாடசாலை முடிந்து மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல காரில் வந்த சிறுமியின் தாய், மகளை பின் இருக்கையில் அமர வைத்துவிட்டு, காரின் முன்னால் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.
அதன்போது பின் இருக்கையில் இருந்த அடையாளம் தெரியாத ஒருவர் மகளை தள்ளிவிட்டு மிரட்டியுள்ளார். தாயையும் மிரட்டியுள்ளார்.
அந்த நேரத்தில், சிறுமியின் தாய் சிறுமியுடன் காரில் இருந்து இறங்கி உதவி கேட்டு அலறியது தெரியவந்தது.
சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார், மேலும் சந்தேக நபர் தனியார் வாடகை வாகனத்தை பயன்படுத்தி அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியானதை அடுத்து, விரிவான விசாரணை நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.