மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின்னர் வியாழக்கிழமை (22) அன்று இடுப்பு மேல் பகுதியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (20) அன்று மந்திரியாறு நீரோடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரான வி.கிருஸ்ணதீபன் (அசோக்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கடந்த இரு நாட்களாக குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்ட நிலையில் வியாழக்கிழமை (22) காலை இடுப்புக்கு கீழ் பகுதி அற்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வைத்திய பரிசோதனை மேற்கொண்டு வருகின்றதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.