கண்டி மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவி வருவதாகவும், மிகத் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களில் ஒன்றாக பெயரிடக்கூடிய நிலையை கண்டி அண்மித்துள்ளதாக சமூக சுகாதார வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் சுரங்க பிரனாந்து தெரிவித்தார்.
கண்டி செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஒரு பிரதேசத்தில் வாரத்துக்கு 100க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயாளர்கள் என இனங்காணப்பட்டால் அப்பிரதேசம் தீவிரமாக டெங்கு பரவும் பிரதேசமாக சுகாதார வைத்திய அதிகாரியால் அடையாளப்படுத்தப்படும்.
அந்த அடிப்படையில் தற்போது கண்டியும் அத்தகைய இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
மே மாதம் இதுவரை கண்டி மாவட்டத்தில் 340 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது மேற்படி இலக்கை அண்மித்த தொகையாகும்.
யட்டிநுவர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் கண்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு என்பவற்றிலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதே நேரம் கடந்த வாரத்தில் மட்டும் கண்டி மாவட்டத்தில் 116 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே, எந்த அடிப்படையில் பார்த்தாலும் கண்டி தீவிர டெங்கு அபாய வலயமாக மாறிவருகிறது என்றார்.
மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுத் தலைவர் காணி விவசாய கமநல சேவைகள் அமைச்சர் லால்காந்த தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.