சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான பலஸ்தீன வம்சாவளியைச் சோ்ந்த பிரான்ஸ் பிரதிநிதி ரிமா ஹாசன் உட்பட 12 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு, நிவாரணப் பொருள்களுடன் காஸாவுக்கு அனுப்பி வைத்தது.
சிசிலியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் புறப்பட்ட ‘மாட்லீன்’ என்ற இந்தக் கப்பல், நேற்று (9) காஸாவில் இருந்து 200 கி. மீற்றர் தொலைவில் இஸ்ரேல் இராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டது.
அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட 12 தன்னார்வலா்களை இஸ்ரேல் இராணுவத்தினர் கைது செய்தனா்.
இது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விளம்பர நடவடிக்கை என்று இஸ்ரேல் விமரிசித்துள்ளது. தங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நிவாரணங்கள் மட்டுமே காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
கிரெட்டா தன்பெர்க் உட்பட தன்னார்வலா்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேல் அரசு கூறிய நிலையில் இன்று அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கிரெட்டா தன்பெர்க், இஸ்ரேலில் இருந்து பிரான்ஸ் வழியாக சுவீடனுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவதாக இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
கிரெட்டா தன்பெர்க் உட்பட 3 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர், இஸ்ரேலை விட்டு புறப்படுவதற்கு சம்மதம் தெரிவித்ததால் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மற்றவர்களிடம் இஸ்ரேல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.