இந்திய நாட்டின் இராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குவதற்கு பாகிஸ்தான் இராணுவம் முயற்சி செய்து வருவதாக கேணல் சோபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக கேணல் சோபியா குரேஷி கூறுகையில் , இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய பாதுகாப்புப் படை உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் இராணுவம் தரப்பு கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அனைத்தையும் இந்திய பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் மூலம் பல தகவல்களைத் திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கராச்சி, லாகூர் நகரங்களின் மீது பயணிகள் விமானம் தொடர்ந்து பயணிக்கிறது. பயணிகளின் விமானங்களைத்தான் பாகிஸ்தான் இராணுவம் கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.