தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று (14) உடன்பாட்டை எட்டியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
எடுக்கப்பட்ட முடிவின்படி, அதிகாரத்தை நிறுவும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான பெயர் பட்டியலைத் தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் நாளை (15) கூட உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் , ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், அசங்க நவரத்ன, சுகீஸ்வர பண்டார, முன்னாள் எம்.பி., வீரகுமார திசாநாயக்க தென்னகோன், பிரேமநாத் சி.தொலவத்த, நிமல் லான்சா, மொஹமட் முஸம்மில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, தேசிய அமைப்பாளர் சாகல. ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜெயவீர தொலைபேசி ஊடாக இந்தக் கூட்டத்தில் இணைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான பணி முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திசைகாட்டியை எதிர்க்கும் அனைத்துக் குழுக்களுடனும் கலந்துரையாடி அதிகாரத்தை நிறுவுவதோடு மட்டுமல்லாமல், இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.