இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் உள்ள அரிசி ஆலையில், அரிசி உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (25) காலை அரிசி ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் சிலர், அரிசி உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதை ஆய்வு செய்ய சென்றனர்.
புகை மிகவும் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்தில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் மயக்கமடைந்தனர். தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஐந்து தொழிலாளர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மூன்று தொழிலாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.